கோவை: கோவையில் மாயமான 16 வயது சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது தாய் சிறுமியைக் கண்டித்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு 7:30 மணியளவில் வீட்டில் இருந்து திடீரென சிறுமி மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் இரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரவு முழுவதும் மாணவியைத் தேடினர்.
மாணவி எந்த வழியாக சென்றார் என்பது தொடர்பாக காந்திபுரம், 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சிறுமி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளகோவில் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வெள்ளகோவில் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர் அவரை கோவை அழைத்து வந்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.



