கோவை: கோவை அரசு மருத்துவமனையில் யார் லஞ்சம் வாங்கினாலும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி இருப்பிட மருத்துவர் சரவண பிரியா மற்றும் பல்வேறு துறை மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் ஸ்கேனிங் வார்டு, குழந்தைகள் பிரிவு, என பல்வேறு வார்டுகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் என்னென்ன தேவைகள் தேவைப்படுகிறது என்பது குறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார. மேலும் அங்குள்ள கேண்டினில் தின்பண்டம் மற்றும் தேனீர் பருகினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக முதலமைச்சர் மக்களின் தேவைகளையும் மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.
ஒரு சில தேவைகளை மேம்படுத்த வேண்டி உள்ளது. கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி உள்ளது அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது போன்ற ஆய்வுகள் இனி தொடர்ச்சியாக நடைபெறும். ஒரு சில துறைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது அதனை நிவர்த்தி செய்வதற்கு ப்ரொபோசல் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இங்குள்ள பழைய கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான ப்ரொபோசல்களை கேட்டுள்ளோம். அதனை தயார் செய்ய உள்ளோம் என கூறினார். பராமரிப்பு பணிகளுக்கு தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர் அவர்கள் மட்டுமின்றி அரசு சார்பிலும் மெயின்டனன்ஸ் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக கூறினார்.
தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்ட நிலையில் பணி செய்யாதவர்களுக்கும் சம்பளங்களை தருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறித்தான கேள்விக்கு அது குறித்து முழுமையான ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கு நோயாளிகளுக்கான தள்ளுவண்டி பிரச்சனைகள் குடிநீர் பிரச்சினைகள் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்கான வசதிகள் போதிய அளவு இல்லாதது குறித்தான கேள்விக்கு குறிப்பிட்ட இடம்தான் நம்மிடம் உள்ளது என்றும் செவிலியர்கள் தங்கக்கூடிய இடம் கூட இங்கு இல்லை அதற்கான தேவையும் உள்ளது என்றும் அதற்கான ப்ரொபோசல்களும் தரப்பட்டுள்ளது அதற்கான இடங்களை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
கைதிகள் அறையை விட காவலர்கள் அறை மோசமான நிலைமையில் உள்ளது குறித்தான கேள்விக்கு கூடிய விரைவில் அதனை சரி செய்து தரும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் 20 நாட்களுக்குள் அது சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
எத்தனை நோயாளிகள் வந்தாலும் அதற்கான இட வசதிகளும் அவர்களுக்கு சிகிச்சை தரக் கூடிய வசதிகளும் இங்கு உள்ளதாக மருத்துவர்கள் மருத்துவமனை முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அடுத்தடுத்த ஆய்வுகளில் அது முழுமையாக ஆராய முடியும் என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறை சற்று மோசமாக தான் இருக்கிறது என்றும் அதனை சரி செய்து தர வேண்டும் என்று அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்த அவர் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெளிவாக கூறியிருப்பதாகவும் கூறினார்.
இடப்பற்றாகுறையை நிவர்த்தி செய்வதற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்தக்கூடிய ஆலோசனைகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்
எபோலா வைரஸ்க்கு தமிழகத்தில்தான் சிகிச்சை பிரிவை செய்கிறோம் என்றும் கூறினார். மேலும் அரசு மருத்துவமனையில் எழக்கூடிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் மக்கள் செல்போன் ஆப் மூலமாகவே குறைகளை சொல்லக்கூடிய அளவிற்கு வசதிகளைக் கொண்டு வரவும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் வருவாதால்தான் மருத்துவமனையை தூய்மையாக வைத்துள்ளார்கள் தொடர்ந்து தூய்மை செய்து கொண்டிருந்தார்கள் என்று பலரும் கருத்து தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு அடுத்த முறை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி Surprise Visit ஆக வருகிறேன் என்று தெரிவித்தார்.
மருந்துகள் பற்றாக்குறை குறித்தும் சில மருந்துகளை மருத்துவர்கள் வெளியில் வாங்குவதற்கு நோயாளிகளிடம் நிர்ப்பந்திப்பது தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்கள் உங்களிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் புகார்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதற்கான தீர்வுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவையில் அனைத்து துறைகளிலும் முதலமைச்சரும் ஏற்பார்வையில் மேம்பாடுகளை பார்க்கத்தான் போகிறோம் என்றும் மக்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றக்கூடிய பொறுப்பில் நாங்கள் இருக்கிறோம் அதனை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கினால் யாராக இருந்தாலும் உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் துறை ரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்கள் பல்வேறு மாவட்டங்களில் மோசமான நிலையில் இருப்பது தொடர்பான கேள்விக்கு, தமிழகத்தில் சுமார் 1300 விடுதிகள் உள்ளது அனைத்தையும் முழுமையாக தற்பொழுது வரை ஆய்வு செய்யப்படவில்லை உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு எந்த கட்டிடமும் இல்லை என்று அதிகாரிகள் ரிப்போர்ட் அளித்துள்ளார்கள் கூடிய விரைவில் ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான அறிக்கையில் சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார்.
மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அதில் முதலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதனை தொடர்ந்து தொழில் துறை என்பது கோவையின் கண்ணாக உள்ளது கல்வி தொழில் மருத்துவம் என்ற அனைத்தையும் மேம்படுத்த இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தனியார் நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் அதைவிட மேன்மையாகவும் அரசுத்துறைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் போக்குவரத்து நெரிசல் மிகவும் சவாலாக இருக்கிறது என்றும் எத்தனை பாலங்கள் கொண்டு வந்தாலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை எனவே அதற்கான திட்டங்களையும் வகுக்க உள்ளம் அடுத்த ஐந்து வருடங்களில் கோவை மாவட்டத்தில் பல்வேறு நல்ல விஷயங்களை பார்க்கப் போகிறீர்கள் என்று தெரிவித்தார். எதிர்பார்த்த விஷயங்களும் எதிர்பார்க்காத நல்ல விஷயங்களும் கூட நடைபெறும் என்று தெரிவித்தார். மாஸ்டர் பிளான் குறித்து திட்டம் தீட்டப்படும் என்றும் கூறினார்.
வெள்ளலூர் பேருந்து நிலையம் எதனால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகளிடம் முழுமையாக ஆலோசனை செய்து அது குறித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். ஒன்றிய அரசிடம் மெட்ரோ ரயில் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி கோவைக்கு கொண்டு வருவது என்பது எங்களுடைய வாக்குறுதிகளில் இருக்கிறது என்று தெரிவித்தார்.
கோவைக்கு முதலமைச்சர் வருவது குறித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பது தொடர்பான கேள்விக்கு போதும் என்று கையெடுத்து கும்பிட்டு பதிலளிக்காமல் புறப்பட்டார்.



