கோவை: ஆபாச இணையதள விளம்பர குற்றச்சாட்டில் பிரபல இன்ஸ்டாகிராம் தம்பதியினர் மீது கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவேஷ் ராஜ் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் பிரபலமாக செயல்பட்டு வரும் கிரிஷ் – ஐஸ்வர்யா ரகு தம்பதியினர், தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஆபாசத் தன்மை கொண்ட காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.
அத்துடன், அந்த காணொளிகள் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்த ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்தியதுடன், ஆபாச திரைப்படங்களில் நடிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய பதிவுகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் அபாயம் உள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றமாக கருதப்படக்கூடியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச இணையதளங்களை விளம்பரப்படுத்துவது பொதுமக்களின் ஒழுக்க நெறிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பெண்களின் கண்ணியத்தையும் குலைக்கும் செயலாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கிரிஷ் மற்றும் ஐஸ்வர்யா ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட காணொளிகளை அகற்றுவதற்காக இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



