கோவை: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு கோவையில் போதை ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை நவஇந்தியா பகுதியில் இருந்து சமூக ஆர்வலர்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

பேரணியை துணை ஆட்சியர் ஹரிப்பிரியா மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் பேரணியிலும் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து சைக்கிள் பந்தய வீரரும் சமூக ஆர்வலருமான ஜி.டி. விஷ்ணு ராம் கூறுகையில், “போதைப்பொருள் பயன்பாடு தனிநபர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதிப்பதுடன், சமூகத்திற்கும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. எனவே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
பெண்களுக்கு ஆண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இளைஞர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி, ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வளர்க்கும் விளையாட்டு நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட வேண்டும்.
நவஇந்தியா பகுதியில் தொடங்கிய இந்த பேரணி கருமத்தம்பட்டி வரை சென்று மீண்டும் தொடக்க இடத்திலேயே நிறைவடைந்தது. சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது” என்றார்.



