கோவை: வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடத்தப்படும் 39-வது கோவை அரசுப் பொருட்காட்சி ஜூன் 11ம் தேதி மாலை தொடங்குகிறது.
கோயம்புத்தூர் மாவட்ட வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் 39-வது அரசுப் பொருட்காட்சியை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மேலும், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க. விக்னேஷ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
32 அரங்குகள்
Also Read: Coimbatore weather: கோவையில் மழை தொடரும்… இந்த வார வானிலை!
தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் இந்த அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 26 அரசுத்துறைகள் மற்றும் 6 அரசுசார்பு நிறுவனங்கள் என மொத்தம் 32 அரசு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தனியார் நிறுவனங்களின் அரங்குகள், விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
Also Read: Coimbatore weather: கோவையில் மழை தொடரும்… இந்த வார வானிலை!
இப்பொருட்காட்சி ஜூன் 11 முதல் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
ராட்டினம், ஜெயின்ட் வீல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதால், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து அரசுத் திட்டங்கள் குறித்து அறிந்து பயனடைய மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை உங்கள் உற்றார் & உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே


