கோவை: அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலிக்காக சிகிச்சை பெறச் சென்ற பெண் நோயாளிக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த தலைமை மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லை, சுகாதாரமான நிர்வாகம் இல்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது, அவருக்கு முறையான வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், போதிய படுக்கை வசதி இல்லாததால், அந்தப் பெண் மற்றொரு நோயாளியின் படுக்கையிலேயே அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அவலநிலையை, அந்தப் பெண்ணுடன் வந்த உறவினர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அப்போது, “இங்கு வீடியோ எடுக்கக்கூடாது” என்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் அந்த நபரை எச்சரிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், பலரும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“மருத்துவமனையில் நடைபெறும் குறைபாடுகள் மற்றும் அவலங்களை வெளிக்கொண்டு வருவதைத் தடுக்கத்தானா வார்டுகளில் வீடியோ எடுப்பதை கட்டுப்படுத்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


