கோவை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெண் குழந்தையை கொன்ற கொடூர தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை அடுத்த ஆனைமலை தம்மம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் கூலி தொழிலாளி.
கடந்த 2017-ம் ஆண்டு சேத்துமடையைச் சேர்ந்த சரோஜினி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இதனால் கோபித்துக் கொண்ட சரோஜினி, சேத்துமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சில நாட்களுக்குப் பிறகு மணிகண்டனும் அங்கு சென்று மாமனார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சரோஜினி வாய்க்கால் பராமரிப்பு பணிக்கு தினக்கூலியாக சென்று வந்தார். அப்போது அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இந்த உறவு குறித்து மணிகண்டனுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் சரோஜினி கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் மனவேதனையடைந்த மணிகண்டன் தனது வீட்டிற்கு திரும்பி சென்றார்.
இதையடுத்து, 2021-ம் ஆண்டு மணிகண்டனின் பெற்றோர் சேத்துமடை சென்று சமாதானம் பேசி சரோஜினி மற்றும் அவரது குழந்தையை அழைத்து வந்தனர்.
ஆனாலும் கணவன் – மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சரோஜினி, கள்ளக்காதலனுடன் செல்வதற்கும் உறவைத் தொடர்வதற்கும் தனது குழந்தை இடையூறாக இருப்பதாக கருதி குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கொலை
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிகண்டன் வேலைக்கு சென்றிருந்தபோது, வீட்டில் இருந்த சரோஜினி, வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் குழந்தை மயக்கமடைந்துவிட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Also Read: கோவையில் ஆண் யானை மர்ம மரணம்!
இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை கொலை செய்தது அதன் தாயான சரோஜினிதான் என்பது தெரியவந்தது.
கொடூர தாய் கைது
இதனைத் தொடர்ந்து ஆனைமலை போலீசார் சரோஜினியை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், குழந்தையை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சரோஜினிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன் பிரபு ஆஜரானார்.



