கோவை: தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தங்க நகை தொழிலாளர்களின் கோரிக்கை தினமாக அறிவிக்கப்பட்டு, கோவை காந்தி பார்க் ரவுண்டானா அருகில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எம். கண்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி. சந்திரன் பொருளாளர் பி. மருதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
பாரம்பரிய தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும். அரசாங்கம் விதித்துள்ள குறைந்தபட்ச ஊதிய முறையை அனைத்து நிறுவனங்களிலும் உடனடியாக அமுலாக்க வேண்டும். தங்க நகை தொழிலாளர்களுக்கு பொற்கொல்லர் நல வாரியத்தில் எளிதாகப் பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும், தொழிலாளர்களை அலைக்கழிக்கக் கூடாது.
தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுவதைக் கண்டிப்பதுடன், அந்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். நல வாரியத்தின் பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை ரூ. 5,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
வெளிநாட்டு ஆபரணங்களின் இறக்குமதிக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும். பெரிய யூனிட்டுகளிலும், பேக்டரிகளிலும் தொழிலாளர் நலச் சட்டத்தை முறைப்படி அமல்படுத்த வேண்டும். சிறு, குறு பட்டறைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கிட வேண்டும். மேலும், அவர்களிடம் தொழில்வரி கேட்டு தொல்லை தரக் கூடாது.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரம்பரியமிக்க இந்தத் தொழிலையும், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்களையும் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.


