கோவை: கோவையில் அதிவேகமாகச் சென்ற கல்லூரி மாணவர்களின் கார், ஆட்டோ மீது மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்தார். காரில் இருந்த 4 மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 4 மாணவர்கள், காரில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கோவில்பாளையம் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோவை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கார், ஆட்டோவின் பின்புறம் பலமாக மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தில் ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி தலைக்குப்புறமாக கவிழ்ந்தது.
விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல், காரில் பயணித்த 4 கல்லூரி மாணவர்களும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.
வீடியோ
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தலைக்குப்புறமாக கவிழ்ந்து கிடந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மாணவர்கள் அதிவேகமாக காரை இயக்கியதே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


