கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் ‘உடான் யாத்ரி கபே’ (Udaan Yatri Café) மலிவு விலை உணவகத்தில் தற்போது பல்வேறு வகையான திண்பண்டங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 28 முதல் 30 விமானங்கள் சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மட்டுமின்றி, சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகளும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
Also Read: பார்ட்டி பண்ட் பற்றி திமுகவில் இருக்கும் போது தெரியாது- CPIM சண்முகம் பேட்டி..
விமான நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாக, டீ, காபி, குளிர்பானங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நடுத்தர வர்க்க பயணிகள் சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து, விமான நிலையங்களில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் நோக்கில் மத்திய அரசின் ‘உடான் யாத்ரி கபே’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த உணவகத்தில் டீ, காபி, குடிநீர், வடை, அதிரசம் உள்ளிட்ட சிற்றுண்டிகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Also Read:ஆட்டோவை முந்த முயற்சி விபரீதம்… தலைக்குப்புறக் கவிழ்ந்த கல்லூரி மாணவர்களின் கார்- video
ஆனால், கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த உடான் யாத்ரி கபேவில் தொடக்கத்தில் குடிநீர் பாட்டில்களைத் தவிர மற்ற உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை என பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து, தற்போது உடான் யாத்ரி கபேவில் பல்வேறு வகையான திண்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால், கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


