கோவை: ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
ஈஷா அவுட்ரீச் இயக்கம் மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து, கிராமப்புற மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இலவச மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடத்தின. இதில், ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முகாமில் கங்கா மருத்துவமனை மருத்துவர்கள், நவீன மருத்துவ கருவிகள் மூலம் பெண்களுக்கு இலவசமாக மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையுடன் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
Coimbatore power cut: கோவையில் ஜூலை 13ம் தேதி மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள்?
இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன் கூறுகையில், “ப்ராஜக்ட் சக்தி” திட்டத்தின் கீழ் 2020 முதல் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம்களை நடத்தி வருகிறோம்.
ஆதியோகி வளாகத்தில் நடைபெற்றது எங்களின் 150-வது முகாம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 பேருக்கு இலவச சிகிச்சையும் வழங்கியுள்ளோம் என்றார்.
மேலும், சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்தியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அனைத்து பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாக நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈஷா அவுட்ரீச் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ம. சந்திரகாசா கூறுகையில், கங்கா மருத்துவமனை நடத்திய 150 இலவச முகாம்களில் இதுவரை 18 முகாம்களில் ஈஷா இணைந்து செயல்பட்டுள்ளது. அந்த முகாம்களில் மொத்தம் 873 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 7 பேருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பழங்குடியினப் பெண்கள் மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்பது குறைவாக இருந்த நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு முயற்சிகளால் தற்போது அதிகளவில் பங்கேற்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், பழங்குடியினப் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து 150-வது முகாமை நடத்திய கங்கா மருத்துவமனைக்கு நன்றியைத் தெரிவித்தார்.





