கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரசியல் ரீதியிலான கருத்துகளும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் பணிச்சுமையைக் குறைக்க வலியுறுத்தியும், புதிய செவிலியர்களை உடனடியாக நியமனம் செய்யக்கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறை நிலவுவதால், இருக்கும் பணியாளர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாக வேதனை தெரிவித்த போராட்டக்காரர்கள், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளிக்க புதிய நியமனங்கள் மிகவும் அவசியம் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தின்போது ஊடகங்களிடம் பேசிய செவிலியர்கள், “எங்கள் குடும்பங்கள் அனைத்தும் தம்பி முதல்வர் விஜய்க்குத்தான் வாக்களித்தோம் எனவே எங்கள் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” எனக் குரல் எழுப்பினர்.
மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பியதால் சிறிது நேரம் அங்கு விறுவிறுப்பான சூழல் நிலவியது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் செவிலியர்கள் எச்சரித்துள்ளனர்.





