கோவை:கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தனியார் பள்ளி கட்டணங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் அதிக ஆர்வத்துடன் அரசு பள்ளிகளை தேர்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மேம்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கை உயர்வது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அமைச்சர், “அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்த கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது” என்றார்.
மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கணினி அறிவியல் ஆசிரியர்கள் தொடர்பான திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாகவும், அந்த குழு கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
Also Read: கோவை வேலாண்டிபாளையம் பொன்காளியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை திருவிழா கோலாகலம்
மேலும், பள்ளி வளாகங்களை தூய்மையாகவும், மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் சூழலுடன் பராமரிக்கவும், பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் கர்நாடகா பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பயணத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அலுவலகமே அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்றும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான கேள்விக்கு, அந்த திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும்; அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.





