கோவை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசிடம் பேசுவது பயனளிக்காது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் காவிரி நீர் திறந்து விட படாததால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் அசாதாரண சூழலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை மறுதினம் ஆகஸ்ட் 1ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தலுக்கு முன்பு பிரச்சாரம் செய்ததை நம்பி தான் பெரும்பாலான பெண்கள் அக்கட்சிக்கு வாக்களித்தனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு 713 கடைகள் மூடப்படும் என்று அறிவித்தும் முழுமையாக மூடவில்லை என்று தெரிவித்த அவர் ஓரிரு இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டாலும் அதன் அருகிலேயே மணமகிழ் மன்றங்கள் திறக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் தற்பொழுது அரசு மதுபான கடைகளை தனியாருக்கு கொடுப்பதற்கு செயல்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் அவ்வாறு நடந்தால் தமிழகத்தில் கள்ள சாராயம் ஆறு போல் ஓடும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
ஒருபுறம் ஊழல் ஒழிப்பு மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று கூறிவிட்டு லாட்டரி குடும்பத்திற்கு ஒரு தொழிலை ஏற்படுத்தும் நடவடிக்கையாக தான் இது உள்ளது என்றும் இதில் மிகப்பெரிய சதி திட்டம் உள்ளது என்றும் இது போன்ற நடவடிக்கைகளை புதிய தமிழகம் கட்சி என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புகளில் 151 இடங்களை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு தாரை வார்த்துவிட்டது என்று கூறிய அவர் ஒரு அதிகாரியின் தவறால் முதல் மற்றும் இரண்டாவது கவுன்சிலிங் மற்றும் நடத்தப்படுகிறது என்றும் இது மிகப் பெரிய தவறு என்றும் கூறினார் இதனை டெப்டி டைரக்டர் ஷீபா தான் செய்துள்ளார் என்றும் அவர் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அவர் ஏன் அதனை செய்தார் என்று விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கர்நாடக மாநிலம் அதிக நீர் வரும் பட்சத்தில் தான் காவிரியை திறந்து விடுவது என்ற நிலையில் இருக்கின்றனர் என்றும் காவேரி ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஒருமுறை கூட கர்நாடகா இந்த 10 ஆண்டுகளில் நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார் மேலும் இந்த விவகாரத்தில் தமிழகத்தை கர்நாடகம் வஞ்சிப்பதாகவும் கூறினார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் பாஜக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் இருவரும் ஒன்றாக இணைந்து கர்நாடகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பதில்லை என்றும் ஆனால் தமிழகத்தில் அவ்வாறான நிலை இல்லை என்றார். மேலும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் தமிழக அரசு கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எல்லாம் அவசியமற்றது என்றும் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவதும் நீர்த்துப்போகும் பயனளிக்காது.
எனவே நாம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை தான் நாட வேண்டும் இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கர்நாடகாவை பார்த்தாவது இங்குள்ள அரசியல் கட்சிகள் காவிரி விவகாரத்தில் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.





