கோவை அரசு மருத்துவமனை முன் சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் ஆம்புலன்ஸ் இயக்கம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையோரங்களில் விதிமீறி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து, “இது வாகனம் நிறுத்தும் இடமில்லை… உங்கள் வாகனத்தை நிறுத்தி இழக்காதீர்கள்” என்ற எச்சரிக்கை பலகையை கோவை மாநகர காவல்துறை நிறுவி, சாலையோர பார்க்கிங்கை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த சாலையை ஒட்டியே மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த வழியாகச் செல்கின்றனர். சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை அதிகரிப்பதுடன், விபத்து அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.
மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் தடையின்றி செல்ல முடியாத நிலை உருவாகுவதுடன், அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் பாதுகாப்பாக இறங்கி ஏறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு செல்லும் பொதுமக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பும், நோயாளிகளின் உயிரும் கருதி, வாகனங்களை உரிய பார்க்கிங் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதே காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்.
“ஒரு தவறான பார்க்கிங்… பலரின் பயணத்தையும், ஒரு உயிரின் வாய்ப்பையும் தடுக்கலாம். சிறிய ஒழுங்கு, பல உயிர்களை பாதுகாக்கும்.”





