கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஐந்தாவது கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் தேவேந்திரகுல வீதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (59). கூலித் தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆன நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
Also Read: கோவையில் காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்… பட்டாக்கத்தியுடன் சென்ற 19 வயது வாலிபர் கைது!
இதனிடையே வேலுச்சாமி வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, பலத்த காயங்களுடன் வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். தொடர்ந்து சடலத்தை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.
வேலுச்சாமி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலுச்சாமி இரண்டு நாகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், கொலைக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
போலீசார் நடத்திய விசாரணையில், வேலுச்சாமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிவா என்பவர் மாயமானது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
Also Read: போலி செயலி மூலம் பிட்காயின் முதலீடு – தொழிலதிபர் உள்பட 2 பேரிடம் ரூ.61 லட்சம் பறிப்பு
கோவையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பீளமேடு பகுதியில் நவீன் என்பவரும், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்பவரும், பாப்பநாயக்கன்பாளையத்தில் சாந்தி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதனும் சகமானவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனிடையே இந்த மாதத்தில் ஐந்தாவது கொலையாக இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பது கோவை மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





