கோவை: கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் போதையில் சுயநினைவின்றி கிடப்பவர்களை நோட்டமிட்டு, அவர்களிடம் இருந்து செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பல் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் சில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள், பயணத்திற்கு முன்பு மது அருந்திவிட்டு பஸ் நிலையத்திற்கு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு அதிக போதையில் வரும் சிலர், பஸ் நிலையத்திலேயே சுயநினைவின்றி மயங்கி விழுந்து கிடப்பதாக கூறப்படுகிறது.
இதை நோட்டமிடும் மர்மநபர்கள், அவர்களை குறிவைத்து செல்போன், பணம், நகை உள்ளிட்ட உடைமைகளை நைசாக திருடிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் ஒருவர் அதிக போதையில் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், அங்கு யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, அவரிடம் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக திருடியதாக கூறப்படுகிறது.
முதலில் அவரது பர்சை எடுத்த அந்த நபர், பின்னர் செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை பஸ்சுக்காக காத்திருந்த சில பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
வீடியோ
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: கோவையில் வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்ட பெண் அலுவலர்- கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…
சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





