கோவை: கோவை தடாகம் அருகே அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்சடலத்தில், விலங்குகள் தாக்கியதற்கான தடயங்கள் இருப்பதால் அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது…
கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னத்தடாகம் இந்திரா நகர் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் அப்பகுதி மக்கள் பாலத்திற்கு அடியில் சென்று பார்க்கும் போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. உடனடியாக பொதுமக்கள் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு சென்ற போலிசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலில் விலங்குகள் தாக்கியதற்காக தடயங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முகம் முழுவதும் அழுகி மண்டை ஓடு மட்டும் தெரிவதால் யார் அந்த நபர் என கண்டறிவது சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே போலிசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றியும், கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போனதாக பதிவாகியுள்ள புகார்களை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்தடாகம் மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகள், உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.