கோவை: கோவை அருகே ஆனைகட்டி பகுதியில் காட்டு யானை விரட்டியதால் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த எடிஸ்லாவ் லியன் (38) என்பவர் நேற்று காலை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். மாங்கரை சலங்கை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை அவரை நோக்கி வந்துள்ளது. யானையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளார்.
சில தூரம் அவரை துரத்திச் சென்ற யானை பின்னர் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிர் பயத்தில் ஓடியபோது, எடிஸ்லாவ் லியன் கால் தடுக்கி அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்து சிறு காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த சுற்றுலா பயணி இந்தியாவின் பல பகுதிகளை சுற்றிப் பார்க்கும் பயணத்தில் இருந்ததாகவும், கேரளாவில் இருந்து வாடகை மோட்டார் பைக்கில் ஆனைகட்டி, மாங்கரை வழியாக ஊட்டி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அதே பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோவை அங்கிருந்த சிலர் பதிவு செய்துள்ளனர்.
வீடியோ
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சுற்றுலா பயணியை யானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



