கோவை: கோவை மாநகரில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு அச்சுறுத்தியதாக கூறப்படும் நபரை கவுண்டம்பாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியதாவது:
நேற்று காலை, அந்த பெண் தனது வீட்டில் பணிகளில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பின்புறம் சென்று பார்த்தபோது, அங்கு ஒருவர் ஆடையின்றி நின்று கொண்டு ஆபாச சைகைகள் காட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனே அவரது கணவர் அங்கு வந்த நிலையில், அந்த நபர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, அதே நபர் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கடந்த பிப்ரவரி மாதத்திலும் இவரது நடவடிக்கைகள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அப்போது போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில், எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக வந்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் அவர் கோவில்மேடு சாந்தி வீதியைச் சேர்ந்த முருகன் (38) என்பது தெரியவந்தது. அவர்மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



