கோவை: உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் லாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் லாரிபேட்டை பகுதியில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கபடுகின்றன. அதற்கான கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் லாரிப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான லாரியில் (TN66D3619) பின்புறம் பொருட்கள் வைக்கும் இடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் உக்கடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ராஜன் என்பதும் கடந்த சில வாரங்களாகவே லாரி பேட்டை பகுதியில் கிடைக்கின்ற மெக்கானிக் பணிகளை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ராஜனை கடைசியாக பார்த்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜனின் சடலத்திற்கு அருகிலேயே மது பாட்டில் இருந்ததால் மது அருந்தி கொண்டிருக்கும் பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லாரியின் உரிமையாளர் ஜெகதீசன் இடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் லாரி பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



