கோவை: என் மீது என்ன கோபம்? ஒரு பெண் அதிகாரத்திற்கு வந்தால் மக்களுக்குப் பிடிக்காதா என்று பேசி, தவெக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கே வரவழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இது தனது அலுவலகம்தான் என்றும், பெண் அதிகாரத்திற்கு வந்தால் பிடிக்காதா என்றும் கூறி அவர் தற்போது அதற்கான விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தவெகவைச் சேர்ந்த கனிமொழி. இவர் நேற்று அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதுடன், அந்த புகைப்படங்களை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்காக தவெகவைச் சேர்ந்தவர்களே தங்களது எம்எல்ஏவான கனிமொழியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
விமர்சனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இது தனது வீடு அல்ல என்றும், அலுவலகம் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி வெளியிட்ட வீடியோ
அந்த வீடியோ காட்சிகளில், “என் மீது மக்களுக்கு என்ன கோபம்? ஒரு பெண் அதிகாரத்திற்கு வந்தால் பிடிக்காதா?” என்று அவர் பேசியுள்ளார்.
தற்போது அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.



