கோவை:கோவை காளப்பட்டி பகுதியில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணை கீழே தள்ளி, அவரது தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை காளப்பட்டி பாலாஜி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சரண்யா (36). இவர் சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று அதிகாலை, சரண்யா தனது இருசக்கர வாகனத்தை வெளியே எடுப்பதற்காக வீட்டின் காம்பவுண்ட் கேட்டை திறந்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர் திடீரென பின்னால் வந்து அவரது வாயைப் பொத்தி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
Also Read: கோவைப்புதூரில் அரை நிர்வாணமாக கிடந்த பெண்; செல்போன் பேச்சால் வந்த வினை!
பின்னர், சரண்யாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் சரண்யா சங்கிலியை இரு கைகளாலும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு எதிர்த்து போராடியுள்ளார்.
இதில் சங்கிலி இரண்டு துண்டுகளாக உடைந்தது. ஒரு பகுதி அவரது கையில் இருந்த நிலையில், மற்றொரு பகுதியை பறித்துக் கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
சரண்யாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் கண்ணன் மற்றும் அருகில் வசித்து வந்த சண்முகம் ஆகியோர் வெளியே ஓடி வந்தனர். அவர்களை கண்டதும், மர்ம நபர் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஸ்கூட்டரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
Also Read: கோவையில் போலீஸ்காரர் எடுத்த தவறான முடிவு; சோகத்தில் குடும்பம்!
பறிபோன தங்கச் சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


