கோவை: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணடி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (54). இவர் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவியும் இரண்டு மகன்களும் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
இதனால், கடந்த ஓராண்டாக மனோஜ் மட்டும் காங்கேயம்பாளையம் அருகேயுள்ள ராயல் அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். தனிமையின் காரணமாக அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில், தனது மூத்த மகனுக்கு மனோஜ் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனக்கு கடுமையான உடல் வலி, மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவும், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்ததாக கூறபடுகிறது.
இதையடுத்து, வழக்கம் போல் காலை மனோஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் நிலையப் போலீசார், மனோஜ் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான முழுமையான காரணங்களை அறிய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


