கோவை: கோவையில் காதலர்களுடன் கல்லூரி மாணவிகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம், சவுடாம்பிகை நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்றும், படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றும் கூறி கல்லூரியை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை வீட்டில், கல்லூரிக்கு சென்று படிவம் ஒன்றை வாங்கி வருவதாகக் கூறி சென்றுள்ளார். பின்னர் மதியம் அந்த இளம்பெண், தனது தந்தையை போனில் தொடர்பு கொண்டு, தான் அஜித் குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன்பின் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரைப் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அவர் கிடைக்காததால் அவரது தந்தை கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
அதேபோல கோவை ராவத்தூர், குட்டைத் தோட்ட வீதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார்.
கடந்த 2-ம் தேதி காலை அந்த இளம்பெண், தான் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அன்று காலை இளம்பெண்ணின் தந்தை தற்செயலாக அவரது மகளின் நண்பரான பரணி என்பவரைச் சந்தித்துள்ளார். அப்போது, அவர் பரணியிடம் ஏன் கல்லூரிக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு, பரணி கல்லூரி ஜூன் 10-ம் தேதி தான் திறக்கப்பட உள்ளது என கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்து இளம்பெண்ணின், தந்தை உடனடியாக வீட்டிற்கு வந்து தனது மகளை தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் சமையலறையில் மகள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.
அதில், தான் ஒருவரைக் காதலிப்பதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடினார். எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.


