கோவை: கோவை, சக்தி சாலை கணபதி பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும் போது வெறும் காற்று மட்டுமே வந்ததாக பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி குற்றம் சாட்டி உள்ள நிலையில், ஊழியர்கள் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டுத் தங்களது விளக்கத்தை அளித்து உள்ளனர்.
கோவை, சக்தி சாலை, கணபதி பகுதியில் ‘கீர்த்தி ஏஜென்சி’ என்ற பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் எரிபொருள் நிரப்ப வந்த பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி ஒருவர், தனது வாகனத்திற்குப் பெட்ரோல் அடிக்கும் போது எரிபொருள் வரமால் வெறும் காற்று மட்டுமே மெஷினில் இருந்து வந்ததாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அங்கு இருந்த ஊழியர்களிடம் அவர் கேட்ட போது, “காலையில் நேரில் வாருங்கள், மேலாளரிடம் பேசிக் கொள்ளலாம்” என ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் மறுநாள் காலையில் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தரப்பில் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதில், குறிப்பிட்ட வாகனத்திற்கு பெட்ரோல் அடிக்கப்பட்ட காட்சிகள் பதிவாகி உள்ளதாகவும், தங்களது மெஷின்களிலோ அல்லது ஊழியர்கள் தரப்பிலோ எந்தவொரு தவறும் தவறான நடவடிக்கையோ இல்லை என்றும் பெட்ரோல் பங்க் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
Also Read: வாலாங்குளத்தில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்; ராட்சதக் குழாய்களுக்கு இரும்புக் கம்பி தடுப்பு
இருப்பினும், அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் வழக்கமாக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பல வாகன ஓட்டிகள், அங்கு அளவிலும் முறையிலும் மோசடிகள் நடப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் எடைகள் மற்றும் அளவீடுகள் துறை இந்த பெட்ரோல் பங்க்கில் முறையான ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





