கோவை:கோவை காப்பகத்தில் மாணவர் தாக்கப்பட்டதாக மாற்றுத்திறனாளி தாய் கண்ணீர் மல்க கலெக்டரிடம் புகார்.
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் காவியா. மாற்றுத்திறனாளி பெண்ணான இவரது 14 வயது மகன் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள பிரபஞ்ச அமைதி என்ற தனியார் ஆசிரமத்தில் தங்கி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதனிடையே பள்ளி மாணவர்களிடையே காதல் விவகாரத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் காவியாவின் 14 வயது மகனை ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்துவைத்து, அதே ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் 17 வயது மாணவர்கள் இருவர் சேர்ந்து ஐயர்ன் பாக்ஸ் வயரால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் முதுகுப்பகுதி முழுவதும் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காத காப்பக நிர்வாகம், காயம் ஆறும் வரை மாணவரை வீட்டிற்கு அனுப்பவில்லை என்று தெரிகிறது.
இதனிடையே ஒரு மாதம் கழித்து வீட்டிற்கு வந்த தனது மகனின் முதுகில் காயங்கள் இருப்பதைப் பார்த்த காவியா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அப்சாவிடம் புகார் அளித்தார்.
வீடியோ
இதுகுறித்து காவியா கண்ணீர் மல்க கூறுகையில்,
“எனது மகன் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றால் என் மகன் மீது போக்சோ வழக்கு போட்டுவிடுவதாக மிரட்டி என்னை அலைக்கழிக்கின்றனர். எனது மகனை தாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இந்த சம்பவத்தை மறைத்த காப்பக நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அப்சா கூறுகையில், “சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் காப்பகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.



