கோவை: குனியமுத்தூரில் வியாபாரி வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சாஸ்தா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகமது பாரூர். இவரது மகன் சமர் அகமது (44) மரக்கடையில் செருப்பு கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் வசிக்கும் கனகவல்லி என்பவர், சென்னையில் இருந்த முகமது பாரூருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அவசரமாக கோவைக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முகமது பாரூர் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் கனகவல்லியிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் வேலை செய்யும் பெண், அவரிடம் இருந்து சாவியை வாங்கி வேலை முடிந்ததும் மீண்டும் ஒப்படைத்துள்ளார்.
அதன்பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து 3¾ பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க குனியமுத்தூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



