கோவை: கர்ப்பிணி மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை தட்டிக்கேட்ட இறைச்சி கடை தொழிலாளி மீது கல்லால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணியிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட இறைச்சிக் கடை தொழிலாளியின் மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய கணவரை தேடி வருகின்றனர்.
கோவை சுகுணாபுரம், மயில்கல், இட்டேரி வீதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (37). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சிகாபுதீன் (20).
அவர் வீட்டில் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. அப்போது சண்முகவேல் அவ்வப்போது அங்கு சென்று சிகாபுதீனை சமாதானப்படுத்தி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் சிகாபுதீன் தனது கர்ப்பிணி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த சண்முகவேல், சிகாபுதீனிடம் சென்று, “ஏன் கர்ப்பிணி மனைவியிடம் சண்டை போடுகிறாய்?” எனக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிகாபுதீன், “எங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட நீ யார்?” எனக் கூறி சண்முகவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சண்முகவேலின் மனைவி, அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
இதைத் தொடர்ந்து, நேற்று இரவு சண்முகவேல் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சிகாபுதீன் மற்றும் அவரது நண்பர் மயில்கல், சுகுணாபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்த முகமது சுகைல் (22) ஆகிய இருவரும் அங்கு வந்து சண்முகவேலிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்கள் சண்முகவேலை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது மண்டையை உடைத்தனர்.
பின்னர் மிரட்டல் விடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த சண்முகவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சண்முகவேல் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை தாக்கிய முகமது சுகைலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய சிகாபுதீனை போலீசார் தேடி வருகின்றனர்.


