கோவை: கோவையில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் கண்காட்சியில் ஆதித்யாஸ் உணவு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்காக கட்டணமில்லா சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை நீலம்பூரில் உள்ள தாமரை எக்ஸ்க்ளூசிவ் ஃபுட் ஸ்டோரில், 100-க்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகள் இடம்பெற்றுள்ள சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட அரிய சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கோவையில் பிரபலமான ஆதித்யாஸ் ஃபுட் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் சார்பில், இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், உடல் எடை, உடல் நிறை குறியீடு (BMI) உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து ஆதித்யாஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சுகன்யா கூறுகையில்,
“மக்களுக்கு சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆதித்யாஸ் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தரமான மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகிறோம். இன்று நடைபெற்ற பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
மேலும், ஒவ்வொருவரின் உடல்நிலையையும் நிபுணர்கள் மூலம் பரிசோதனை செய்து, அவரவர் உடல்நிலைக்குத் தேவையான உணவு வகைகள் குறித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம்” என்றார்.


