கோவை: கோவை மாநகரில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை பெறப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் 70%க்கும் மேல் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க, பொதுமக்கள் நிம்மதியாக இருக்க ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி தமிழக போலீசார் ரவுடிகளின் விவரங்களை சேகரித்து அவர்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரவுடிகள் கொட்டம் ஒடுக்க போலீஸ் அதிரடி
அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற பெரிய சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில ரவுடிகள் அடி தடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். அவர்கள் மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் சென்னை மாநகர போலீஸ் சட்டத்தின் கீழ் மாநகரில் இருந்து வெளியேற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
READ NEWS :தேர்தல் களம்… பிரசாரத்திற்கு தனியாக போக வேண்டிய நிலை? வானதிக்கு உள்ளக எதிர்ப்பு!
அதன்படி கடந்த ஆண்டு 178 ரவுடிகள் ஆறு மாதங்கள் மாநகரில் இருந்து வெளியேற கோவை மாநகர போலீசார் உத்தரவிட்டனர். நடப்பாண்டில் 25 ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த உத்தரவை மீறி மாநகருக்குள் இருந்த ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தகட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
அதேபோல சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஏ பிளஸ் ரவுடிகளின் ஜாமீனை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு கோவை மாநகரில் உலா வரும் ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து ஒடுக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியாக இருந்து வருகின்றனர். குற்றச்சம்பவங்களும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தமிழக அரசின் உத்தரவின் படி ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றச்சம்பவங்களும் 70 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. பொதுமக்களுக்கும், சட்டம் – ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் ரவுடிகளுக்கு 51ஏ சம்மன் கொடுக்கப்பட்டு கடந்த ஆண்டு 178 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் 25 பேர் வெளியேற்றப்பட்டு, அடுத்தக்கட்டமாக வெளியேற்றப்பட உள்ள ரவுடிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல 51ஏ சம்மன் காலம் முடிந்து மாநகரில் நுழைந்த ரவுடிகள் கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஒரு சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். வெளியேற்ற உத்தரவை மீறிய மாநகரில் நுழைந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
800க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில்
இவ்வாறு 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து ரவுடித்தனத்தை தொடர்ந்து வரும் ஏ பிளஸ் ரவுடிகளின் ஜாமீனை ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரவுடிகள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
594 ரவுடிகளிடம் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. அவர்கள் ஏதாவது தவறு செய்து, கைது செய்யப்பட்டால் பிணை பத்திர காலம் முடியும் வரை சிறையில் இருந்து வெளியே வர முடியாது.
தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 28 ரவுடிகள் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் போலீசார் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களின் வருமானத்தின் பின்னணி ஆராயப்படுகிறது. அதில் தவறான வழியில் அவர்களுக்கு வருமானம் வருகிறது என்பது தெரியவந்தால் அந்த வருமானம் தடுக்கப்படுகிறது.
மேளதாள ஊர்வலத்துடன் வேட்புமனு தாக்கல்; கவுண்டம்பாளையத்தில் நாதக வேட்பாளர் பரபரப்பு
இதனால் கோவையில் உள்ள ரவுடிகள் அவர்களது சொந்த ஊருகளுக்கு திரும்பி விடுகின்றனர். சிலர் கடைக்கும் வேலைகளை செய்ய தொடங்கி உள்ளனர். இவ்வாறு கோவை மாநகரில் 800க்கும் மேற்பட்ட ரவுடிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களது கொட்டம் அடக்கப்பட்டுள்ளது.
சிறிய ரவுடிகள், மதுபோதை அடி தடி, வழிப்பறிகள் போன்ற சம்பவங்கள் பீட் ரோந்து போலீசார் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 52 இருசக்கர வாகன ரோந்து குழுக்கள் தற்போது 3 ஷிப்டுகளில் செயல்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
கோவையில் குற்றச்சம்பவங்கள் 70% சரிவு
இதனால் கஞ்சா போன்ற போதை பொருட்களை கட்டுப்படுத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது, அதனால் போதை பொருட்கள் புழக்கமும் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சம்பவங்கள் 70% குறைந்துள்ளாதாவும் கூறினர்.

