கோவை: கோவையில் சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளை வைத்து லாவகமாகப் பிச்சை எடுத்த கும்பலைப் பிடித்த இளைஞர்கள், அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில், பச்சிளம் குழந்தைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கும்பல் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வருகிறது.
கடும் வெயில் மற்றும் மழையிலும் குழந்தைகளை சாலையில் தூக்கியபடி பிச்சை எடுக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவிற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் அனைவரும் தற்போது மாவட்ட குழந்தைகள் காக்கும் மையத்தில் (Children Welfare Home) பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளைத் துன்புறுத்தி பிச்சை எடுக்க வைத்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றவர்கள் கைது
கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்களில் இதுபோன்று பச்சிளம் குழந்தைகளை வைத்து, கடத்தல் கும்பல் மற்றும் வடமாநிலத்தவர்கள் பிச்சை எடுப்பது தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் வராமல் மெத்தனமாக செயல்படுவதாக இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வீடியோ காட்சிகள்
மேலும், கோவையில் இனிவரும் நாட்களிலாவது இதுபோன்ற பச்சிளம் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுக்கும் மாஃபியா கும்பல்களைக் கண்டறிய காவல்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து சிக்னல்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


