கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 25 நாட்டு வெடிகுண்டுகள், வெடி மருந்து, திரி மற்றும் வெடி உப்புகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே வசித்து வருபவர் வரதராஜன் மகன் சரவணகுமார் (43). இவர் கோவில் திருவிழாக்களில் பட்டாசு வெடிப்பதை தொழிலாக செய்து வந்தார். பின்னர் தானாகவே பட்டாசுகளை தயாரித்து திருவிழாக்களில் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் வகையிலான வெடிகுண்டுகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக கருங்கல் பாறை குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து வீட்டிலேயே வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளார்.
இவர் தயாரித்த வெடிகுண்டுகள் மிகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடியதாகவும், சுமார் 10 அடி தூரம் வரை நில அதிர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருந்ததாக கூறப்படுகிறது. பட்டாசு தயாரிப்பதற்கான உரிய அனுமதி எதுவும் பெறாமல், வெடி மருந்துகளை பயன்படுத்தி பட்டாசுகள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு திருப்பூரில் கார்த்தி என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து இதேபோன்று வெடிகுண்டுகளை தயாரித்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கட்டிடம் சேதமடைந்ததுடன், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சரவணகுமார் மற்றும் வீட்டின் உரிமையாளர் கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருவதாக கூறப்படுகிறது.
சரவணகுமார் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பதை அக்கம் பக்கத்தினர் விரும்பாத நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் குடியிருப்பு பகுதிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என பலமுறை எச்சரித்துள்ளனர். இருப்பினும், தான் வெடிகுண்டுகள் தயாரிப்பதில்லை என கூறிக்கொண்டே ரகசியமாக வீட்டில் தயாரித்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சூலூர் போலீசார் சரவணகுமார் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 25-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த நாட்டு வெடிகுண்டுகள், பல்வேறு வகையான வெடிபொருட்கள், நூற்றுக்கணக்கான ராக்கெட் வெடிகள் மற்றும் சுமார் 200 கிலோ அளவிலான பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வெடிகுண்டுகளை வைத்திருந்தது தொடர்பாக சரவணகுமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட் வெடிகளை வாரப்பட்டியில் உள்ள வெடி மருந்து தொழிற்சாலைக்கு கொண்டு சென்று செயலிழக்கச் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சூலூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடி மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.


