கோவை:கோவை தெற்குத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; மாவட்ட ஆட்சியர் வந்து எங்களை சந்திக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பேட்டியளித்துள்ளார்.
கோவை தெற்குத் தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அம்மன் அர்ஜுனன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதனிடையே அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை. பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளன; ஆனால் இவ்வாறான அராஜகம் நடந்ததில்லை. தெற்கு தொகுதியில் அதிகமான அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். இருப்பினும் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. காவல்துறை தரப்பிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பணப்பட்டுவாடா நடைபெறும் போது நாங்கள் ஆட்களை பிடித்து ஒப்படைத்தாலும், தேர்தல் அதிகாரிகள் பணம் விநியோகிக்கும் நபர்களை விடுவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் தெற்கு தொகுதியில் கரூரை சேர்ந்த 18 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவது தான்.
இந்த தொகுதி கலவர பூமியாக உள்ளது. தேர்தல் ஆணையம் கண் மூடி இருப்பது போல உள்ளது. இது குறித்து அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் அளித்தாலும், பெரிய அளவில் பணம் பிடித்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார்.
உயிரை விட அவர்களுக்கு பணம்தான் முக்கியமா? பணம் வாங்கவில்லை என்று கூறினாலும் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த தொகுதியில் கண்டிப்பாக தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.
சாதாரண மக்கள் திருமணச் செலவு, மருத்துவச் செலவு அல்லது மளிகை பொருட்கள் வாங்க பணம் எடுத்துச் சென்றாலும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து ஆய்வு செய்கிறார்கள்.
கோவையில் ஒரு லாட்ஜில் கரூரை சேர்ந்த திமுக நபர்கள் தங்கி உள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டும், போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது.
ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரம் இங்கு நடைபெறுகிறதா? நான் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் கேட்டும் இதுவரை பதில் அளிக்கவில்லை. போலீசார் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்.
இவ்வாறு அம்மன் அர்ஜுனன் தெரிவித்தார்.


