கோவை: கோவை சூலூரில் தலையில் தேங்காய் உடைத்து நூதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை சூலூர் அருகே தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலின் 3ஆம் ஆண்டு முப்பெரும் விழா மற்றும் நூதன நேர்த்திக்கடன் வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் துவக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, அம்மனின் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க, கோவிலின் பூசாரிக்கு அருள் வந்து ஆடியபடி, வரிசையில் அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களின் தலையில் பூஜை செய்யப்பட்ட தேங்காய்களை ஒவ்வொன்றாக உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
தலையில் தேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் தங்களது மற்றொரு வினோத நேர்த்திக்கடனான ‘சாட்டையடி’ வழிபாட்டை மேற்கொண்டனர். பூசாரி அருள் வந்து பக்தர்களுக்கு சாட்டையடி வழங்கி ஆசி அளித்தார்
இந்த நூதன மற்றும் வினோத வழிபாட்டைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு வந்து வியப்புடன் சாமி தரிசனம் செய்தனர்.


