கோவை: கோவை வடவள்ளி பகுதியில் அடுத்தடுத்து உள்ள மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையம், நேரு நகர் 2-வது வீதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள மூன்று வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டு உரிமையாளர்களான சந்திரசேகரன், செந்தில்குமார், கிருஷ்ணராஜ் ஆகியோருக்கும், வடவள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், வீட்டு உரிமையாளர்களை தொடர்புகொண்ட போலீசாரிடம், அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், கோவை நோக்கி திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உரிமையாளர்கள் வந்த பின்னரே வீடுகளில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளன, எவ்வளவு மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயுள்ளன என்பது குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.



