கோவை: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. டாக்டர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, யுனைடெட் காலேஜ் ஆஃப் பார்மசி மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுடன் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.
“உலக போதைப்பொருள் பிரச்சனை: நீடிக்கும் சிக்கல்கள், புதிய சவால்கள், ஆக்கப்பூர்வமான யோசனைகள்” என்ற 2026-ஆம் ஆண்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.

பேரணியை தொடங்கி வைத்து பேசிய டாக்டர் கனிமொழி சந்தோஷ், இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பது குடும்பம், கல்வி நிறுவனங்கள், அரசு, காவல்துறை மற்றும் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு என்று வலியுறுத்தினார். மாணவர்களிடையே விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தினால்தான் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய டி.எஸ்.பி. பொன்னுசாமி, போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் மனநல பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலைக்குரியது என்பதால், கல்வி நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை என வலியுறுத்தப்பட்டது.
“போதை இல்லா இளைஞர்கள் – பாதுகாப்பான தமிழகம்” என்ற நோக்கத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



