கோவை: கோவை மத்திய அரசின் ரோஜ்கார் யோஜனா நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை மண்டலத்தைச் சேர்ந்த தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தின் அதிகாரிகள் கே.பிரசாந்த் மற்றும் ஸ்வாகதா ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதாகவும், சர்வதேச அளவில் பல்வேறு சவால்களை தொழில்துறையினர் சந்தித்து வரும் சூழலில் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை வளர்த்து வேலை வாய்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை 300க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மண்டலத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள 10 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், 5 தொழில் நிறுவனத்தினருக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.
பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் முதல் முறையாக வேலையில் சேர்ந்தவர்கள், வேலை வழங்குநர்களுக்கு ஊக்கத்தொகையை நேரடி பலன் பரிமாற்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் வழங்கினார்.
இதற்காக நாடு முழுவதும் சென்னை, கோவை, மதுரை உட்பட 200 இடங்களில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நேரலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.


