உக்கடத்தில் பயணிகள் முன்னிலையில் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!

கோவை: கோவையில் நேரப் பிரச்சனை தொடர்பாக பயணிகள் முன்பு அடிதடியில் ஈடுபட்ட நடத்துனர்களை போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நேற்று காலை மதுக்கரைக்கு செல்லும் தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. இதில் நடத்துனராக ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள மேலக்காடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (38) என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது மற்றொரு தனியார் பேருந்தும் மதுக்கரைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடத்துனர் பிரசாந்த் (32) பணியில் இருந்தார் .

அப்போது நேரம் பிரச்னை தொடர்பாக தனியார் பேருந்து நடத்துனர்களான மோகன்ராஜ் மற்றும் பிரசாந்த் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் முன்னிலையில் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் திடீரென்று மோகன்ராஜை தாக்கினார். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மோகன்ராஜ் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

இந்த நிலையில் தனியார் பேருந்து ஊழியர்கள் அடிக்கடி நேரம் பிரச்னை தொடர்பாக பேருந்து நிலையங்களில் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து வருவதால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே காந்திபுரத்திலும் இது போன்று தனியார் பேருந்து ஊழியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இப்போது உக்கடம் பேருந்து நிலையத்தில் மோதல் நடந்துள்ளது.

வரும் நாட்களில் தனியார் பேருந்து ஊழியர்கள் இதுபோன்று நேரம் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக பேருந்து நிலையங்களில் தகராறு செய்தால் பேருந்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Recent News

Video

Join WhatsApp