கோவை: உடல் தானம் செய்த திராவிட விடுதலைக் கழக நிர்வாகிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திராவிட விடுதலைக் கழக நிர்வாகி ராமச்சந்திரன் இயற்கை எய்தியதை தொடர்ந்து அவரது உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
திராவிட விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது விருப்பப்படி, மருத்துவ ஆய்வுக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்.
இது குறித்து பேசிய கொளத்தூர் மணி திராவிட விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவராக இருந்த ராமச்சந்திரன், வயது முதிர்வு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். அவர் ஏற்கனவே தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காகத் தானம் செய்ய வேண்டும் என்று விருப்பக் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதனடிப்படையில் அவரது உடல் தானமாக வழங்கப்படுகிறது என்றார்.
மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், அரசுப் பணியின் காரணமாக கோவைக்கு வந்து குடியேறினார். பணியில் இருந்தபோதே பகுத்தறிவுக் கழகத்தில் இணைந்து செயல்பட்டவர். பெரியாரின் மறைவுக்குப் பின், திருவாரூர் தங்கராசு தலைமையில் இயங்கினார். பின்னர் 2001-இல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டபோது அதன் புறநகர் மாவட்டத் தலைவராகவும், 2012 முதல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவராகவும் முன்மாதிரியாகச் செயல்பட்டு வந்தார்.
இந்துத்துவ அமைப்புகளின் தாக்கம் நிறைந்த மேட்டுப்பாளையம் பகுதியில், பல்வேறு எதிர்ப்புகளையும் வழக்குகளையும் கடந்து துண்டறிக்கைகள் விநியோகிப்பது உள்ளிட்ட இயக்கப் பணிகளைத் தொய்வின்றிச் செய்தவர் என்றார். முதியவராக இருந்தாலும் இளைஞர்களைப் போல துடிப்புடன் செயல்பட்டவர் என்றும் இரட்டைக்குவளை ஒழிப்புப் போராட்டம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் முன் நின்றவர் என்றார்.
முந்தைய திராவிட மாடல் ஆட்சியில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தான ஊக்குவிப்புக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல், தற்போது அமைந்துள்ள புதிய அரசும் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானத்தை ஊக்குவிக்கப் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
உலக அளவில் கண் தானத்தில் இலங்கை போன்ற சிறிய நாடே முதன்மையாகத் திகழ்கிறது.
ஆனால், இவ்வளவு பெரிய இந்திய நாட்டில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு இன்னும் போதிய அளவில் ஊக்குவிக்கப்படவில்லை. எனவே, இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் தானத்தோடு சேர்த்து, கண் தானம் செய்வதையும் ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



