கோவை: கோவையில் தமிழ்நாடு அரசு காஜிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவை போத்தனூர் ரோட்டில் உள்ள மதினா மஹாலில் இன்று காலை தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாவட்ட அரசு காஜிகள், இஸ்லாமிய அறிஞர்கள், சமூக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக முன்னேற்றம், மத உரிமைகள் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சங்களில், தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
மேலும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனுடன், புதிய பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசு எளிமைப்படுத்த வேண்டும் என்றும், மத சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு காஜிகள் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக, பள்ளிவாசல்கள் மற்றும் மத அமைப்புகள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடாது என்றும், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை அரசு தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தமிழகத்தில் அமைதி மற்றும் மத நல்லிணக்கம் நிலவுவதற்கு அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு மாவட்ட அரசு காஜிகள், இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து ஒருமித்த கருத்துக்களை பதிவு செய்தனர்.
இந்த கூட்டத்தின் முடிவில், தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அனுப்ப தீர்மானிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் நடைபெற்ற இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்போது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


