கோவை: கோவை மாவட்டத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது.
அதன்படி கோவை நீலகிரி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான மழையும் தொடர் மழையும் பெய்து வருகிறது. கோவை மாநகரில் நேற்று(08.06.2026) மாலை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் இன்று(09.06.2026) கோவை நீலகிரி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


