விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகர் ரவி மோகன் அறிவித்துள்ளார்.
ரவி மோகன் விவாகரத்து விவகாரம்
நடிகர் Ravi Mohan மற்றும் அவரது மனைவி Aarthi Ravi இடையேயான குடும்பப் பிரச்னை கடந்த சில மாதங்களாக பெரும் விவாதமாகி வருகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்தச் சூழலில், பின்னணி பாடகியும் தெரபிஸ்டுமான Kenishaa Francis பெயர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ரவி மோகனின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்த கெனிஷாதான் இந்த பிரிவுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்தது. குறிப்பாக, ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” நிறுவன பணிகளிலும் கெனிஷா முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்பட்டது.
கெனிஷாவுடன் கைக்கோர்ப்பு
இதற்கிடையில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட சம்பவங்கள் இணையத்தில் வைரலானது. குறிப்பாக கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மேடையேறும் முன் கெனிஷா, ரவி மோகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியது.

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா மறைமுகமாக பதிலடி கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ஆர்த்தி குறித்து அவதூறாகப் பேசுவதை தடுக்க நீதிமன்றத்தை அணுகிய ஆர்த்தி தரப்புக்கு சாதகமாக, எந்த ஊடகத்திலும் அல்லது சமூக வலைதளங்களிலும் ஆர்த்திக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
ரவியை பிரிந்த கெனிஷா
இந்த உத்தரவுக்கு பின்னர், தன்னை “ஒரு குடும்பத்தை பிரித்த பெண்” என சித்தரிப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கெனிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் வேதனையுடன் பேசியிருந்தார். ரவி மோகன் மனதளவில் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது, ஒரு தெரபிஸ்டாக மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தேன் என்றும், ஒருபோதும் மற்றொருவரின் குடும்பத்தை கலைக்க நினைக்கவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் தனது வாழ்க்கையில் ஏற்கனவே பல இழப்புகளை சந்தித்துள்ளதாகவும், இளம் வயதில் திருமணம், கரு இழப்பு, பெற்றோரை இழந்த வலி ஆகியவற்றை கடந்துவந்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து செய்யப்பட்ட விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் கேலிகளால் மனமுடைந்து போயுள்ளதாக தெரிவித்த கெனிஷா, சென்னையை விட்டு வெளியேறுவதோடு, இசை மற்றும் சிகிச்சை பணிகளையும் கைவிடுவதாக அறிவித்தார்.

அவரது பதிவில், “உண்மையான அன்புக்கும் விசுவாசத்துக்கும் இந்த உலகம் இடம் தரவில்லை. இனி ரவி மோகன் உங்கள் வசம்” என குறிப்பிட்ட அவர், ரவி மோகனுடனான தொடர்பை முறித்துக்கொள்வதாகவும், சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சினிமாவில் நடிக்க மாட்டேன்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், மிகுந்த உணர்ச்சியுடன் தனது தரப்பை வெளிப்படுத்தினார். “அமைதியாக இருந்த என்னை பலர் பலவீனமாக நினைத்துவிட்டார்கள். இத்தனை நாள் பேசாமல் இருந்ததே என் தவறு. விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன்” என்று தொடங்கிய அவர், கடந்த 23 ஆண்டுகளாக சினிமாவுக்காக உழைத்த வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.

தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்ததாக கூறிய அவர், “என் குழந்தைகளை கூட பார்க்க விடவில்லை. பள்ளிக்குச் செல்லும் போதும் பாதுகாவலர்களுடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று விலகி வந்தேன்” என்று வேதனையுடன் கூறினார்.
நான் பார்க்காத ஹீரோயின்களா?
மேலும், “என் வாழ்க்கையில் ஒரு பெண் என்னை புரிந்துகொண்டார். இப்போது அவரையும் விலகச் செய்து விட்டார்கள். நான் நடிகன்; தினமும் அழகான நடிகைகளுடன் வேலை செய்கிறேன். 45 வயதில் வேறு பெண்களைத் தேடி செல்வதற்கு என்ன அவசியம்?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரது பெற்றோரும் இந்த உறவை விரும்பவில்லை என்றும், “சிறிதளவு அன்பு இருந்திருந்தால் நான் வீட்டை விட்டு வெளியேறியிருப்பேனா?” என்று கண்ணீருடன் பேசினார். “என் தனிப்பட்ட வாழ்க்கையை சரிசெய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை” என்று அவர் தெரிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.



