கோவை: பெண்கள் ஆடை அணியும் விவகாரத்தில் நடிகைகள் கங்கனா ரனாவத் மற்றும் க்ரீத்தி சனோன் இடையேயான மோதல், தற்போது தேசிய அளவில் அரசியல் சண்டையாக மாறியுள்ளது.
பொதுவாக கங்கனா ரனாவத் என்றாலே சர்ச்சைகளுக்கும், பரபரப்புகளுக்கும் எப்போதும் பஞ்சமிருக்காது. இவர் நடிகையாக இருந்து பாஜ சார்பில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றுள்ளார். இவர் அரசியலில் நுழைய முடிவெடுத்த பிறகு, ஜெயலலிதா மற்றும் சோனியா காந்தி போன்ற மூத்த பெண் அரசியல்வாதிகளின் கதாபாத்திரத்தில் நடித்து மேலும் தன்னை பிரபலப் படுத்திக் கொண்டார். பொது வெளியில் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர், விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு வெளிப்படையாக கருத்து தெரிவித்து பரபரப்பை உண்டாக்குவார்.
அந்த வகையில் தான், தற்போது சக பாலிவுட் நடிகை ஒருவர் குறித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு சண்டை செய்துள்ளார்.

என்ன பிரச்சினை
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் க்ரீத்தி சனோன். இவர் அண்மையில் நகை கடை ஒன்றின் விளம்பரத்தில் நடித்தது மிகவும் சர்ச்சையானது. அதில், அவர் கவர்ச்சியான லெஹங்கா அணிந்தபடி, தனது சகோதரர் மற்றும் வளர்ப்பு செல்லப்பிராணியான நாய்க்கு தங்கத்தினால் ஆன ராக்கியை கட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. வடமாநிலங்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகையை கவர்ச்சியான ஆடை அணிந்து இழிவு படுத்திவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஏராளமான நெட்டிசன்கள் விமர்சித்து கருத்து பதிவிட்டு வந்த நிலையில், சக நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தும் தன் பங்கிற்கு விமர்சித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “தன்னுடைய சகோதரனுக்கு பிகினி அல்லது உள்ளாடை அணிந்து ராக்கி கட்டுவது ஏன்? இது வேண்டுமென்றே செய்த செயல்,” என்று கருத்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு பிறகு, இந்த விவகாரம் பூதாகரமானது. நெட்டிசன்கள் க்ரீத்தி சனோனை திட்டி கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த விவகாரத்தின் தன்மையை புரிந்து கொண்ட சம்பந்தப்பட்ட நகைக்கடையும், க்ரீத்தி சனோனின் இந்த விளம்பரத்தை உடனடியாக சமூகவலைதளத்தில் இருந்து நீக்கியது.
கடுப்பு
இதனால் கடுப்பான க்ரீத்தி சனோன், கங்கனாவின் பெயரை குறிப்பிடாமல் காட்டமான பதிலை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்திருந்தார். அதில், பாரம்பரியம் என்பது ஆடைகளில் இல்லை. மனப்பூர்வமான உணர்வுகளில்தான் அடங்கியுள்ளது. மேலும், பெண்கள் எதை அணிய வேண்டும் என்று மற்றவர்கள் தீர்மானிக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கலாச்சாரம் என்பது உடைகளின் கழுத்துப்பட்டையில் அல்ல, இதயத்தில்தான் இருக்கிறது, எனக் குறிப்பிட்டிருந்தார். க்ரீத்தி சனோனின் இந்தப் பதிவுக்கு ஆதரவாக, அவருடைய சகோதரி உள்பட ஏராளமான நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

அரசியலான பதிவு
கங்கனா ரனாவத் மற்றும் க்ரீத்தி சனோன் ஆகிய சினிமா பிரபலங்களுக்கு இடையேயான சண்டையில், பிரபல அரசியல் கட்சியான காங்கிரஸின் முகமாக பார்க்கப்படும் ராகுல், நடுவே புகுந்து கொளுத்திப் போட்டுள்ளார். க்ரீத்தி சனோனின் அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அவர், “ஒரு பெண் என்ன அணிகிறாள், எங்கு செல்கிறாள் என்பது அவளது முழு சுதந்திரம். பெண்கள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி விமர்சிப்பதை நிறுத்துங்கள்” என்று கூறி, #SmashThePatriarchy என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அன்று புனேவில் நடந்த “சத்ரோ கி கூஞ்ச்” என்ற பெண் சுதந்திரம் தொடர்பான நிகழ்வில் ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்குப் பிறகுதான் அவரது smash the patriarchy கருத்து தொடர்பான சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, இரு சினிமா பிரபலங்களுக்கு இடையேயான வார்த்தை மோதல், அரசியல் விவாதமாக மாறியது.

பாரத மாதா கி ஜெய்
ராகுலின் இந்தப் பதிவுக்கு கங்கனா மற்றும் பாஜவினர் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில்,கங்கனா விடுத்துள்ள பதிவில், ராகுல் காந்தி ஒரு பெண்ணிடம் ஆணாதிக்கத்தை ஒடுக்குங்கள் என்று கேட்பது போன்ற படம் இடம்பெற்றிருந்தது. அதற்கு அந்தப் பெண், “அண்ணா, பொறுங்கள். பாரத மாதா கி ஜெய் என்று தொடங்குவோம்” என்று பதிலளிப்பது போன்ற கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜும் கடும் பதிலடி தொடுத்தார். பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை காங்கிரஸ் தலைவர் கண்டிக்கத் தவறிய பல சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்ணே இல்லையா?
அந்தப் பதிவில்; கங்கனா ரனாவத்திற்கு எதிராக அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டபோது ராகுல் காந்தி மௌனமாக இருந்தார். மேலும், ஹேமா மாலினிக்கு எதிராக இழிவான கருத்து தெரிவிக்கப்பட்டபோதும் ராகுல் காந்தியிடமிருந்து ஒற்றைக் கண்டன அறிக்கைக்கூட வரவில்லை. அதிர் ரஞ்சன் சௌத்துரி இந்தியக் குடியரசுத் தலைவரைப் பற்றி அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். பல காங்கிரஸ் தலைவர்கள் பெண்களுக்கு எதிராகப் பேசியுள்ளனர். ஆனாலும் ராகுல் காந்தி மௌனமாகவே இருந்தார். இப்போது அவர் ஆணாதிக்கத்தை ஒடுக்குவது பற்றிப் பேசுகிறார். நான் ராகுல் காந்தியைக் கேட்க விரும்புகிறேன், கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு பெண் தலைவர் கூட ஏன் இல்லை? மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அவர் ஏன் எதிர்த்தார்? இப்போது நீங்கள் பெண்கள் உரிமை மற்றும் முன்னேற்றம் பற்றிப் பேசுகிறீர்களா?” என்று அவர் கூறியிருந்தார்.
சினிமா பிரபலங்களுக்கு இடையே எழுந்த சண்டை தற்போது அரசியல் மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரம் இன்னும் எது வரைக்கும் செல்லும் என்பதை இனி வரும் நாட்களில் தான் தெரியும்.




