கோவை: கோவையில் FL 2 மற்றும் FL 3 பார்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கோவை மாநகர காவல் துறை சார்பாக, மாநகர பகுதிகளில் உள்ள FL2 உரிமம் (மனமகிழ் மன்றம்) மற்றும் FL3 உரிமம் (மனமகிழ் மன்றம்) பெற்ற பார் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவையில் 120 FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவல் ஆணையர் வழங்கிய முக்கிய அறிவுரைகள்:
- 21 வயதிற்கு குறைவான நபர்களுக்கு எந்தவிதத்திலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
- நன்னடத்தையின் அடிப்படை மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக ஆணங்கள் செயல்படுவதை உறுதி செய்து, உரிய வயதுடையவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும்.
- FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பணியாளர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்களில் வாகன நிறுத்த வசதிகளை முறையாக ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதுபானம் அருந்துவோரால் ஏற்படும் தகராறுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தவிர்க்க பொருத்தமான கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) நிரந்தரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
- அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் சட்ட விரோத போதைப் பொருட்கள் பார்களில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து, அவ்வாறு கண்டறியப்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- அரசு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். நேர விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
- FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார்களில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்குண்டான அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாமல் பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.


