கோவை: கோவில்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை தடாகம் சாலை கோவில்மேடு பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு வந்து செல்பவர்களால் சாலையில் நடமாட முடியாத நிலை இருப்பதாகவும், கடைகளை மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அந்த பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றுக்கு அருகில் உள்ளதாகவும், தினமும் இங்கு மதுபோதையில் வரும் சிலர் தகராறு செய்வதும், சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்வதாக தெரிவித்தனர்.
இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடவே அச்சத்தில் உள்ளதாகவும், இப்பகுதியில் பல்வேறு கோயில்களும் உள்ள நிலையில் பெரியவர்கள் கூட நடந்து செல்ல அச்சப்பட வேண்டிய சூழல் நீடிப்பதாகவும் கூறினர்.
எனவே, தமிழக அரசு தற்போது மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.



