கோவை:காதல் தகராறால் மனவேதனை அடைந்த வடமாநில இளைஞர் கோவையில் தூக்கிட்டு தற்கொலை; ஒரு வாரத்திற்கு பிறகு அழுகிய நிலையில் உடல் மீட்பு.
காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் அழுகிய நிலையில் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் (23). இவர் கோவை கணேசபுரத்தில் தனது உறவினர் சிரவன் மகதோ என்பவரது வீட்டிற்கு அருகில் தங்கிருந்து, சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், சச்சின் குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கும், சச்சின் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சச்சின் குமார், கடந்த ஒரு வாரமாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையே நேற்று காலை சச்சின் குமார் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சச்சின் குமார் அழுகிய நிலையில் சடலமாகத் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசார் சச்சின் குமார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


