கோவை: கோவையில் பெண் மேலாளர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் அருணாச்சல தேவர் காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (34) சுங்கம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் 11 முதல் 15ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை அலுவலகத்தில் கிருஷ்ணவேணி பணியில் இருந்தபோது, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த குபேந்திரன் (39) அங்கு வந்துள்ளார்.
அவர் தனது மனைவிக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த கணமே, மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து கிருஷ்ணவேணி மீது ஊற்றிய அவர், “உன்னை உயிரோடு எரிக்காமல் விடமாட்டேன்” என மிரட்டி தீவைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குபேந்திரனை கைது செய்தனர். பெட்ரோல் பாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


