கோவை: சூலூர் அருகே 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குளக்கரையில் 10 வயது சிறுமி சடலமாக மீட்பு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் தப்பி ஓட முயற்சித்த நிலையில் கீழே விழுந்து கால் முறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை சூலூர் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமான 10 வயது சிறுமி, நேற்று முன் தினம் காலை குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கூலி வேலை செய்து வரும் நாகப்பட்டினம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கார்த்தி, மற்றும் அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் ஆகிய இரண்டு நபர்களை பிடித்துள்ள போலீஸார், அவர்களைச் ரகசிய இடத்தில் வைத்து சம்பவத்துக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதனிடையே, தங்கள் குழந்தையின் இறப்புக்கு நீதி கேட்டு, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்புள்ள திருச்சி சாலையில் அமர்ந்து இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை சுமார் 8 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
தற்போது கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தும் பணிகளை போலிசார் மேற்கொண்டு வந்தனர். அப்போது கார்த்திக் போலிசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. தப்பி செல்ல முயன்ற போது அவர் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



