கோவை: சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் போலீசாரின் விசாரணை சரியில்லை, தாமதமாக வழக்குப் பதிவு செய்தனர் என்று கூறி பொதுமக்கள் ஆவேச சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூலூரை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமாகியுள்ளார். இரவாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்திலும் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். இதனிடையே சிறுமி அப்பகுதியில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுமியை கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே போலீசாரின் விசாரணை முறை சரியில்லை என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
சிறுமி மாயமான சம்பவத்தில் போலீசார் தாமதமாகவே வழக்குப் பதிவு செய்ததாகவும், மெத்தனப்போக்கை கடைபிடித்ததாகவும் கூறி ஆவேசமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென சூலூர் காவல் நிலையம் முன்பு திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீடியோ காட்சிகள்
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால், திருச்சி சாலையில் பாப்பம்பட்டி பிரிவு வரை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே மறியல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான நிலை நீடித்து வருகிறது.

கோவையில் இந்த வாரத்தில் 14 வயது சிறுவன் கொலை உட்பட இதுவரை மூன்று கொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



